பஞ்சபூத ஸ்தலங்கள்

இந்து மதத்தில் மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள் பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வர் ஆவார்கள். படைத்தல், காத்தல், அழித்தல் எனபது முறையே இவர்களுடைய பொறுப்பாகும்
இந்த உலகமானது நீர், நிலம், நெருப்பு, வாயு, ஆகாயம் எனும் ஐந்து பூதங்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டு, சிவ வழிபாட்டில், இந்த ஐந்து பூதங்களையும் முன்னிறுத்தி, தனித்தனியாக ஐந்து இடங்களில் உள்ள கோவில்களில் ஐம்பூதங்களுக்கான வழிபாடு நடக்கிறது. இந்த ஐந்து சிவதலங்களையும் பஞ்சபூத தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
 உலகத்தில் பஞ்ச பூதங்கள் ஐந்து. அவை வானம், பூமி, காற்று, நீர்:, நெருப்பு. 
உடலில் பஞ்ச பூதங்களும் ஐந்து. அவை மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவை.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் பஞ்ச பூதங்கள் ஒளி பெற்றுச் சிறப்படைய வேண்டும் என்பதற்கு ஐந்து முக விளக்கும், தீபாராதனைகளும் காட்டப்படுகிறது. 


நிலம் -  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில
 நீர் - திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் 
காற்று - காளஹஸ்தி 
ஆகாயம் - சிதம்பரம் நடராஜர் கோவில்  
நெருப்பு - திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்


நிலம் :  காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில்

 ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது
 இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள்  
இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.

 ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன. 

நீர் : திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டத்தில் புகழ் மிக்க ஸ்ரீரங்கத்துக்கு அருகில் அமைந்துள்ளதுபஞ்சபூதங்களுள் ஒன்றான நீருக்கு புகழ் பெற்றது இந்தத் தலம்.

இங்கு உள்ள சிவபெருமான் ஜம்பு எனும் பெயருடைய நவாப்பழ மரத்தின் கீழ் இருந்ததால் அவர் ஜம்புகேஸ்வரர் என்றும், அவரது துணைவியார் அகிலாண்டேஸ்வரி என்றும் அழைக்கப்படுகின்றனர். 
 
இக்கோவிலில் பிரம்ம தீர்த்தம், இந்திர தீர்த்தம், ஜம்பு தீர்த்தம், ராம தீர்த்தம், ஸ்ரீமத் தீர்த்தம், அக்னி தீர்த்தம், அகத்திய தீர்த்தம், சோம தீர்த்தம், சூர்ய தீர்த்தம் என ஒன்பது தீர்த்தங்கள் உள்ளனஇக்கோவிலின் சிறப்பு, சிவலிங்கம் தரைமட்டத்திற்கு கீழ் உள்ளது, இதனால் எப்போதும் கோவில் கருவறையில் நீர்கசிவு இருந்து கொண்டே இருக்கும். கோடை காலங்களில் கூட நீர் வற்றாமல் கசிந்து கொண்டிருக்கும். இதனால் இங்கு உள்ள சிவலிங்கம் எப்போதும் பாதி நீரில் நனைந்தபடியே இருக்கிறது 
 
அகிலாண்டேஸ்வரியின் ஆட்சித்தலமாகவும் இக்கோவில் விளங்குகிறது. இங்கு உள்ள அம்மனின் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பர்.  முன்னர் அம்பாள் கொடூரமாக இருந்ததால் ஆதிசங்கரர் இக்காதணிகளை அணிவித்து, முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்து உக்கிரத்தை தணித்தார்.
 
காற்று :காளஹஸ்தி
 
 காளஹஸ்தி ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. திருப்பதியில் இருந்து 38 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. 
பஞ்சபூதத் தலங்களில் இக்கோவில் வாயுத் தலமாக விளங்குகிறது.
 
 சீகாளத்தி என்ற சொல்லில், சீ என்பது சிலந்தியை குறிக்கிறது. காளத்தி என்பது காளம், அத்தி என இரு பெயர் பெறுகிறது. இதில் காளம் என்பது பாம்பினையும், அத்தி என்பது யானையையும் குறிக்கிறது. சிலந்தி, பாம்பு, யானை ஆகிய உயிர்கள் சிவலிங்கத்தை பூஜித்து முக்தி பெற்றதால் அவற்றின் பெயரால் இவ்வூர் சீகாளத்தி எனப் பெயர் பெற்றது.
இங்கு லிங்கமாக காட்சியளிக்கும் சிவனின் திருமேனியை கூர்ந்து கவனித்தால், கீழ் பாகத்தில் யானை தந்தங்கள், நடுவில் பாம்பு, பின்புறம் சிலந்தி ஆகியவற்றை காணலாம். இங்கு எழுந்தருளியுள்ள சிவன், காளஹஸ்தீஸ்வரர் என்றும், அம்மன் ஞானபிரசுனாம்பிகை என்றும் அழைக்கப்படுகின்றனர்.இத்தலம் கண்ணப்பர் தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது.

ஆகாயம் : சிதம்பரம் நடராஜர் கோவில்  


சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது
இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது

 இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது. 
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம் 


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது.  108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே
மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும் .இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.

இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.

எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும். 



நெருப்பு :திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்தக் கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.
 கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம்

படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை. 
பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார். 

சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும். த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

அண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது.

ஆறாம் பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.
ஐந்தாம் பிரகாரம்:கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம். 


 நான்காம் பிரகாரம்:கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம்,  சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர்,  பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம். 


 


மூன்றாம் பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம். 
 
இரண்டாம் பிரகாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது
 


முதல் பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.


காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது. 




0 comments:

Post a Comment